• Friday, 29 March 2024
பிலவ வருட தமிழ் புத்தாண்டு கணிப்பு

பிலவ வருட தமிழ் புத்தாண்டு கணிப்பு

ஏப்ரல் மாதம் 14ம் தேதி, புதன்கிழமை, சித்திரை 1ம் தேதி மங்களகரமான பிலவ தமிழ் வருடம் பிறக்கிறது. சார்வரி ஆண்டிலும் பெருமழை வெள்ளம், பருவம் தப்பி பெய்த மழையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். ஆடு மாடுகள் பாதிப்புக்கு ஆளாகின. இந்த பிலவ வருடத்திலும் பருவம் தவறி மழை பெய்யும் என்று வெண்பா தெரிவித்துள்ளது.

அறுபது ஆண்டுகளுக்கும் இடைக்காட்டுச் சித்தர் அந்தந்த ஆண்டுகளுக்கான பலன்களை வெண்பாவாக பாடி வைத்துள்ளார்.

பிலவ ஆண்டுக்கான இடைக்காட்டுச் சித்தர் பாடிய வெண்பா:

"பிலவத்தில் மாரி கொஞ்சம் பீடை மிகும் ராசர்

சல மிகுதி துன்பம் தரும் நலமில்லை

நாலுகாற் சீவனெல்லாம் நாசமாம் வெள்ளாண்மை

பாலுமின்றிச் செய்புவனம் பாழ்"

இந்தப் பாடலுக்கான விளக்கம்... பிலவத்தில் மழை அளவு கொஞ்சமாகவே இருக்கும். நாடாளும் அரசர்களுக்கு நோய் உண்டாகும். பருவம் தவறிப் பெய்யும் மழையால் துன்பம் உண்டாகும். ஆடு மாடுகள் முதலான கால்நடைகள் துயரத்தை அனுபவிக்கும். வேளாண்மை செழித்து வரும் வேளையில் இயற்கையால் பாதிப்பு ஏற்படும் என்று வெண்பா கூறுகிறது.

மழை வளம் எப்படி

சார்வரி ஆண்டிலும் பெருமழை வெள்ளம், பருவம் தப்பி பெய்த மழையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். ஆடு மாடுகள் பாதிப்புக்கு ஆளாகின. இந்த பிலவ வருடத்திலும் பருவம் தவறி மழை பெய்யும் என்று எச்சரிக்கிறது வெண்பா.

சூரியன் முதல் சனி வரை

பிலவ வருடம் பிறக்கும் போது கிரக நிலைகள் மிக வலுவாக இருக்கின்றன. திருக்கணிதப்பஞ்சாங்கப்படி நவ கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால், மேஷத்தில் சூரியன் உச்சமாகவும் உடன் சுக்கிரனும் சந்திரனும் பயணிக்கின்றனர். ரிஷபத்தில் ராகுவும், மிதுன ராசியில் செவ்வாயும் பயணிக்கின்றனர்.விருச்சிக ராசியில் கேது பகவானும், மகர ராசியில் ஆட்சி பலத்தோடு சனிபகவானும், கும்ப ராசியில் அதிசார குரு பகவானும், மீனத்தில் புதன் பகவான் நீசமடைந்தும் சஞ்சரிக்கின்றன.

நோய் பாதிப்பு

பிலவ வருடம் புதன்கிழமை வருடப்பிறப்பு இருப்பதால் நன்றாக மழை பெய்யும். செவ்வாயின் வீட்டில் சுக்கிரன், சுக்கிரன் வீட்டில் செவ்வாய் இருப்பதால் கால்நடைகளுக்கு புதிய நோய்கள் தாக்கும். விவசாயிகளுக்கும் பாதிப்பு அதிகமாகும் வாகன போக்குவரத்து மூலம் சாலை விபத்து ஏற்படும். பலவிதமான வியாதிகளால் மக்கள் துன்பப்படுவார்கள். மருத்துவர்களை கடவுளாக மக்கள் பாவிக்கும் நேரம் வரும். புழுதி சூறாவளி காற்றுகள் பலமாகத் தாக்கும். ஆன்லைன் மூலம் வியாபாரம் அதிகரிக்கும்.

பிலவ வருட பிறப்பு

பிலவ ஆண்டான தமிழ்ப் புத்தாண்டு, மேஷ லக்னம் மேஷ ராசி பரணி நட்சத்திரத்தில் பிறக்கிறது. பரணி சுக்கிரன் நட்சத்திரம் என்பதால் பெண்களுக்கு உற்சாகத்தையும் மனநிறைவும் தரும்படியான ஆண்டாக பிலவ ஆண்டு இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். திருமணம் ஆன தம்பதியருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். இந்த ஆண்டில் மிக அதிகம் பேருக்கு திருமணங்கள் நடக்கும்.

விவசாயம் செழிக்கும்

பரணி நட்சத்திரத்தில் புத்தாண்டு பிறப்பதால் மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும்படியான வருமானம் சிறப்பாகவே இருக்கும். ஹோட்டல், உணவுத் தொழில் இந்த ஆண்டும் கொடிகட்டிப் பறக்கும். நிறைய பேர் ஆர்டர் செய்து சாப்பிடுவார்கள். விவசாயம் செழிப்பாக இருக்கும், பங்கு வர்த்தகம் சிறப்பாக இருக்கும்.மந்த நிலையில் இருந்த கட்டுமானத் தொழில் அசுர வேகத்தில் வளர்ச்சியடையும்.

தொழில் லாபம் வரும்

வாகனம் தொடர்பான தொழில் சிறப்பாகவே இருக்கும்.சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்கள், உற்பத்தி தொடர்பான தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் அனைவருக்கும் மன நிறைவைத் தரக் கூடிய வகையில் தொழில் வளர்ச்சி ஏற்படும். லாபமும் கிடைக்கும்.

அரசு, தனியார் வேலை

தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு வேலை மாற்றம் ஏற்படும். தற்போது பணிபுரியும் இடத்தில் சில நெருக்கடிகளை சந்திக்க வேண்டியது வரும். அரசுப் பணியாளர்களுக்கு நெருக்கடிகள் அதிகரிக்கும். அரசு அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள். பிரச்சினைகள், வழக்குகள் என அதிகம் சந்திக்க வேண்டியது வரும்.

கலைத்துறை வாய்ப்பு

இசை நாட்டியக் கலைஞர்களுக்கு நல்ல வளர்ச்சியும், அங்கீகாரமும், மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். சார்வரி வருடத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது திறைத்துறை கலைஞர்கள்தான். இந்த பிலவ ஆண்டிலும் திரைத்துறைக் கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்தாலும் ஓரளவுக்கு மட்டுமே வளர்ச்சியை அடைய முடியும்.

வேலை வாய்ப்பு எப்படி

தகவல் தொழில்நுட்பத் துறையில் மிதமான வளர்ச்சி இருக்கும். அந்தத் துறையில் இருப்பவர்களுக்கு வேலை இழப்பு அல்லது வேலை மாற்றம் உண்டாகும். கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் வெளிநாடு தொடர்பு உடைய தொழில்களில் மந்தநிலை ஏற்படும். வெளிநாட்டு வர்த்தகம் குறையும்.

 

கல்வித்துறை

சார்வரி வருடத்தில் மாணவர்களுக்கு கல்வி சாலைகளின் வாசனையே இல்லாமல் போய்விட்டது ஆன்லைன் கல்விதான் ஆசானாக இருந்தது. ஏராளமான மாணவர்கள் வாசிக்கம் பழக்கத்தை மறந்து விட்டனர். எனவே இந்த பிலவ ஆண்டில் பல மாணவர்களுக்கு

ஞாபக மறதி, கவனமின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும். தேர்ச்சி விகிதம் குறையவும் வாய்ப்பு உண்டு. கல்வியைத் தொடர முடியாத சூழ்நிலைகள் கூட ஏற்படும், மாணவர்கள் கல்வியில் மிக அதிக அளவில் கவனத்தைச் செலுத்த வேண்டும்.

அரசு ஆட்சி அதிகாரம்

அரசியலில் எதிர்பாராத மாற்றங்கள் நடக்கும். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் சிக்கல்களையும் நெருக்கடிகளையும் சந்திக்க வேண்டியது வரும். அரசியல்வாதிகளுக்கு பெரும் நெருக்கடிகள் ஏற்படும். பத்திரிகை மற்றும் ஊடகத் தொழில் சில பாதிப்புகளையும், பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடும். பாதிப்புகள் குறைய தொழில் வளர்ச்சியடைய ராகு காலத்தில் ஸ்ரீதுர்க்கையை வணங்கலாம். சனிபகவானை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்கலாம்.

 
 
 

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!