• Saturday, 20 April 2024
அதிமுக எம் .எல். ஏ. டிரைவர் வீட்டில் கட்டு கட்டாக பணம்

அதிமுக எம் .எல். ஏ. டிரைவர் வீட்டில் கட்டு கட்டாக பணம்

மணப்பாறை அ.தி.மு.க எம்.எல்.ஏ-வின் டிரைவர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியதில் ஒரு கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டிருக்கிறது.

பணம் சிக்கிய வீடு
பணம் சிக்கிய வீடு

மணப்பாறை தொகுதி வேட்பாளராக அ.தி.மு.க-வில் மூன்றாவது முறையாக சந்திரசேகர் களம் காண்கிறார். தி.மு.க கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சியில் அப்துல் சமது, நாம் தமிழர் கட்சியில் கனிமொழி. அ.ம.மு.க கூட்டணியில் தே.மு.தி.க சார்பில் கிருஷ்ண கோபால் உள்ளிட்டோர் போட்டியிடுகிறார்கள். இந்நிலையில், அ.தி.மு.க-விலிருந்து, வேட்பாளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக, தேர்தல் அதிகாரிகளுக்கு, ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில், வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், அ.தி.மு.க வேட்பாளர்களின் உறவினர் வீடுகள், அவர்களுக்கு நெருங்கியவர்களை மறைமுகமாகக் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம், மணப்பாறை தொகுதியில் உள்ள வலசுப்பட்டியில், மணப்பாறை எம்.எல்.ஏ சந்திரசேகரனிடம் ஜே.சி.பி ஆப்ரேட்டராக வேலை பார்க்கும் அழகர்சாமி என்பவரது வீட்டில், வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். சோதனையில், ஐநூறு ரூபாய் கொண்ட கட்டுகளை, சாக்கு மூட்டையில் கட்டி வீட்டில் உள்ள பரண் மீது மறைத்து வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

மொத்தம் ஒரு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம், பெட்டவாய்த்தலை பகுதியில் அ.தி.மு.க வேட்பாளரின் உறவினர்கள் காரில் மூட்டை மூட்டையாகப் பணத்தைக் கொண்டு சென்றவர்கள், அதிகாரிகள் வழிமறித்த போது சாலையோரம் சாக்கு மூட்டையை வீசியிருக்கிறார்கள். அதிலிருந்த ரூ.1 கோடி பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அ.தி.மு.க. பிரமுகர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

 

இத்தகவலைத் தேர்தல் ஆணையத்திற்குத் தாமதமாகத் தெரிவித்த காரணத்திற்காகத் திருச்சி ஆட்சியர் சிவராசு, எஸ்.பி ராஜன் மற்றும் சப்-கலெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதே போல் இரண்டு நாட்களுக்கு முன்பு கூட திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட 8 காவல்நிலையங்களில் பணிபுரியும் போலீஸார் மற்றும் அதிகாரிகளுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

புதிதாகப் பொறுப்பேற்ற கலெக்டர் திவ்யதர்ஷினி மற்றும் மாநகர போலீஸ் கமி‌ஷனர் லோகநாதன் ஆகியோரது உத்தரவின் பேரில் அதிரடி சோதனை நடத்தி, ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரையிலான பணக் கவர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தி.மு.க வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!