• Thursday, 25 April 2024
பாம்பு மன்னனை தீண்டிய நாகம்

பாம்பு மன்னனை தீண்டிய நாகம்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் வாவா சுரேஷ். (வயது 48). சுரேஷ் பாம்பு பிடிப்பதில் வல்லவர். திருவனந்தபுரம் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் ஆபத்தான பாம்புகளையும் லாவகமாக பிடித்து வனத்துறையிடம் ஒப்படைப்பார். பின்னர் அதனை பத்திரமாக அடர்ந்த காட்டு பகுதிக்குள் விடுவதற்கும் ஏற்பாடு செய்வார்.

இதனால் அவரை கேரள மக்கள் பாம்பு பிடி மன்னன் என்று அழைப்பது வழக்கம். மேலும் எங்காவது பாம்பு பிடிக்க வேண்டுமென்றால் மக்கள் சுரேசைதான் அழைப்பார்கள்.

பாம்பு பிடிக்கும் பணியை சுரேஷ் பள்ளி பருவத்தில் இருந்தே தொடங்கி விட்டார். கேரளா முழுவதும் இதுவரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்துள்ளார். இதில் 200-க்கும் மேற்பட்ட பாம்புகள் அரியவகை ராஜநாகம் மற்றும் நல்ல பாம்பு வகையை சேர்ந்தவை.

இந்த வகை பாம்புகளை பார்த்தாலே அச்சம் தோன்றும். ஆனால் சுரேஷ் எந்தவித பயமுமின்றி, இப்பாம்புகளை அனாயசமாக பிடித்து சாக்கில் அடைத்து தூக்கி செல்வார்.

இந்த நிலையில் கோட்டயம் பகுதியை அடுத்த குறிச்சியில் குடியிருப்பு பகுதிக்குள் நல்ல பாம்பு ஒன்று சுற்றி வருவதாக அப்பகுதி மக்கள் சுரேசுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த பாம்பை பிடிக்க சுரேஷ், நேற்று கோட்டயம், குறிச்சிக்கு சென்றார்.

மாலை 4.30 மணிக்கு பாம்பு இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அதனை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். லாவகமாக பாம்பை பிடித்து விட்ட சுரேஷ், அதனை ஒரு பிளாஸ்டிக் பையில் அடைக்க முயன்றார். அப்போது, பாம்பு திடீரென சீறியபடி, அவரது வலது முழங்காலில் கடித்துவிட்டது.

பாம்பு கடித்த பின்னரும், சுரேஷ், தான் பிடித்த பாம்பை சாக்குபையில் அடைத்து, வனத்துறையிடம் ஒப்படைத்தார். பின்னர் அதே இடத்தில் தலைசுற்றி மயங்கி விழுந்தார்.

உடனே அப்பகுதி மக்கள் அவரை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக கோட்டயம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

பாம்பு பிடி மன்னன் வாவா சுரேஷ், பாம்பு கடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவது குறித்து சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. பலரும் அவர் விரைவில் குணமடைய வேண்டும் எனக்கருத்து பதிவிட்டனர்.

மாநில சுகாதார மந்திரி வீணா ஜார்ஜூம், பாம்பு பிடி மன்னன் சுரேஷ், விரைவில் குணமடைய வேண்டும் என விருப்பம் தெரிவித்து கருத்து பதிவிட்டார். மேலும் அவருக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் இலவசமாக செய்யப்படும் எனவும் அறிவித்தார்.

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!